குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்: கல்வி நிறுவனங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. 
ஆலோசனை கூட்டம் 

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தை தொடர்ந்து, தனியார், அரசு பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 
கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் உயர்கல்வி சான்றிதழ்கள் தகுந்த விதிமுறைகளை பின்பற்றி ரத்து செய்யப்படும். கல்வி நிறுவனங்களில் புதியதாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களை (தற்காலிக மற்றும் நிரந்தர) பணி நியமனம் செய்யும் முன் காவல்துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாயமாக்கப்படும். 

சுய பாதுகாப்பு கல்வி 

பணியாளர்கள் அனைவரும் ‘‘குழந்தை பாதுகாப்பு உறுதி மொழி’’ ஆவணத்தில் கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்படும். அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து சுய பாதுகாப்பு கல்வி அளிக்கப்பட வேண்டும். அனைத்து ஆசிரியர் பட்டய/ பட்டப்படிப்பு பாடத்திட்டங்களில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த பாடத்திட்டம் சேர்க்கப்படும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போக்சோ வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்கள் பற்றி தொகுக்கவும் மற்றும் கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலராக தொடர்பு அலுவலர் நியமிக்கப்படுவார்கள். மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்படவேண்டும். இருபாலர்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் பெண் உயர்கல்வி ஆசிரியைகள் நியமனம் செய்யப்படவேண்டும். விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்விச் சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச்செல்ல வேண்டும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெளியே முகாம்களில் தங்க நேரும் பட்சத்தில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்படவேண்டும். 

மாணவர் மனசு புகார் பெட்டி

மாணவிகள் விடுதிகளுக்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படக்கூடாது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும், 1098, 14417 ஆகிய உதவி எண்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும். புகார் அளிக்கும் மாணவன், மாணவியின் பெயர் விவரம் எக்காரணம் கொண்டும் வெளிவரக்கூடாது. இதற்கு அந்த கல்வி நிலைய தலைமை ஆசிரியர் பொறுப்பாவார். மாணவர் மனசு புகார் பெட்டி அனைத்து பள்ளிகளிலும் இருப்பது உறுதி செய்யப்படவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். மேற்கண்ட அனைத்து பரிந்துரைகளையும் தனியார் மற்றும் அரசுக் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Post a Comment

Previous Post Next Post