புதுடில்லி:
நடுத்தர வருவாய் பிரிவினருக்கு சலுகை அளிக்கும் வகையில், வரும் பட்ஜெட்டில் சில மாற்றங்கள் இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வருமான வரி விலக்குக்கான வரம்பு இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின், 2020 - 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும், பிப்.,1ல் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.இந்த பட்ஜெட்டில், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு சில சலுகைகள் அளிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து மீள்வதற்காக, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு சலுகைகள், தற்சார்பு இந்தியா என்ற பெயரில் அறிவிக்கப்பட்டன. அந்த அறிவிப்புகள், இந்த பட்ஜெட்டிலும் தொடர வாய்ப்புள்ளது.மத்திய வருவாய் பிரிவினருக்கு, வருமான வரியில் சில சலுகைகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த, இரண்டு பட்ஜெட்டுகளில், ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, வரி செலுத்த தேவையில்லை என்று கூறப்பட்டது. ஆனால், வருவாய் வரி விலக்கு, 2.5 லட்சம் ரூபாயாகவே உள்ளது.அதை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது, 3.5 கோடி வரிக் கணக்கு தாக்கல் செய்வோருக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.அதைப் போலவே, நிரந்தரக் கழிவு, 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
மருத்துவ செலவு, விடுமுறை பயண ஈட்டுக்கான விலக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனால், நிரந்தரக் கழிவை,ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Post a Comment