பயிற்சிகள்
தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி
மையத்தில் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான
தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு,
மாதிரி நேர்முகத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில்
அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தில் 2024 டிசம்பர் மாதம் நடைபெற்ற மாதிரி
நேர்முகத் தேர்வில் 69 பேர் கலந்து கொண்டனர். பின்னர், இப்பயிற்சி மையத்தில்
சிறப்பு அனுமதி பெற்று இந்திய வனப்பணி முதன்மைத் தேர்விற்கு தங்கி பயின்ற 39
ஆர்வலர்களில் 3 மகளிர் உள்பட 8 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாதிரி
நேர்முகத்தேர்வு தற்போது, வனப்பணி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள
தேர்வர்களுக்கும், முதல்கட்ட மாதிரி நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள
இயலாதவர்களுக்கும் இப்பயிற்சி மையத்தின் மூலம் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற
அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்கள், தலைசிறந்த பாட வல்லுனர்களைக் கொண்டு வருகிற
26, 27 மற்றும் 28 ஆகிய 3 நாட்கள் மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இது,
தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள், தங்களது நேர்முகத் தேர்வை மிகச் சிறப்பான முறையில்
எதிர்கொள்ள ஏதுவாக அமையும். அகில இந்திய வனப்பணி, குடிமைப்பணி முதன்மைத் தேர்வில்
தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த தேர்வர்கள் மற்றும் 2024-ம் ஆண்டு
டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட மாதிரி நேர்முகத் தேர்வை தவறவிட்டவர்கள்
இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி நேர்முகத் தேர்வில் பங்கு பெற
அனுமதிக்கப்படுவர். கட்டணம் இல்லை இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.
அவ்வாறு பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தினை,
www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் 24-ந் தேதிக்குள் பதிவு செய்து
கொள்ளலாம். மேலும், தகவல்களை அறிந்து கொள்ள aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல்
முகவரிக்கோ அல்லது 9345766957 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கோ அல்லது 044-24621475 என்ற
தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment