பாடும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும்: தமிழக அரசின் மாநில பாடலாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து' முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Saturday 18 December 2021

பாடும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும்: தமிழக அரசின் மாநில பாடலாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து' முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாடும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும்: தமிழக அரசின் மாநில பாடலாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து' மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

நீராரும் கடலுடுத்த... 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- 

தமிழர்களின் வாழ்வாக அவர்தம் உணர்வுக்கு ஒளியாக திகழ்வது தமிழ்மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனி செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியை தாயாக போற்றும் தமிழர், தம் அன்னையை வாழ்த்திப்பாட பொதுவான பாடல் ஒன்றை ஏற்கவேண்டும் என்ற உள்ளக்கிடக்கையை ஒரு நூற்றாண்டுக்கும் முன்னதாகவே வெளிப்படுத்தியுள்ளனர். இதனை தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், இலக்கிய அமைப்புகளும், தமிழ்ச்சங்கங்களும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய “நீராரும் கடலுடுத்த’’ எனும் பாடல் பாடப்படவேண்டும் எனும் கோரிக்கை 1913-ம் ஆண்டைய கரந்தை தமிழ்ச்சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம் பெற்றது. இந்த பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக, 1914-ம் ஆண்டு முதல் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடிவந்துள்ளார்கள். மேலும், கரந்தை தமிழ்ச்சங்கத்தை தாய்ச்சங்கமாக கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உருவான தமிழ்ச்சங்கங்களின் விழாக்களிலும் தொடக்கப்பாடலாக இந்த பாடல் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இந்த பாடலை தமிழக அரசின் பாடலாக அறிவிக்கவேண்டும் என்று அன்றைய முதல்-அமைச்சர் அண்ணாவுக்கு, கரந்தை தமிழ்ச்சங்கத்தினர் கோரிக்கையாக எழுதி அனுப்பியும் வைத்தார்கள். தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, 1970-ம் ஆண்டு, மார்ச் 11-ந்தேதியன்று நடந்த அரசு விழாவில் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி பேசும்போது, ‘‘இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும். ‘நீராரும் கடலுடுத்த' எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அமையும்’’ என்று அறிவித்தார். அதன்படியே 1891-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள பாயிரத்தில் “தமிழ் தெய்வ வணக்கம்’’ எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயை போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை 1970-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதியன்று, கருணாநிதி தலைமையில் அமைந்த அன்றைய தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணையும் வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு வருகிறது. மாநில பாடல் இந்தநிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படுவது குறித்து, சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படவேண்டிய காலச்சூழ்நிலையை ஒட்டி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைவட்டுகளை கொண்டு இசைப்பதை தவிர்த்து, பயிற்சி பெற்றவர்கள், நிகழ்ச்சியில் பாடவேண்டும் எனவும் சமீபத்தில் ஆணையிடப்பட்டுள்ளது. இந்தநேர்வில் அன்னை தமிழ்மொழியை போற்றிடும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படுவதை ஒருங்கிணைத்து, நெறிமுறைப்படுத்தவேண்டிய நிலையில், கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. *மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய கீழ்க்கண்ட வரிகளைக்கொண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தமிழக அரசின் மாநிலப்பாடலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்த்தாய்வாழ்த்தின் கீழ்க்கண்ட வரிகள், 55 வினாடிகளில் முல்லைப்பாணிராகத்தில் (மோகனராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடப்படவேண்டும், 

 நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் 
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் 
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் 
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! 
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற 
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! 
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!” 

 எழுந்து நிற்கவேண்டும் 

*தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படவேண்டும்.

 * தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்கவேண்டும். * மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

 * பொதுநிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து' இசைவட்டுகளைக்கொண்டு இசைப்பதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்படவேண்டும். 

 * அன்னை தமிழின் பெருமையை உலகறியச்செய்வதிலும், இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment