பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
காந்தி பிறந்தநாளையொட்டி கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 2-ந் தேதி பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
காந்தி பிறந்தநாள்
தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கவேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி வருகிற 2-ந் தேதி காந்தியடிகள் பிறந்தநாளையொட்டியும், நவம்பர் 14-ந் தேதி ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே தனித்தனியாக பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, பரிசு வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
2-ந் தேதி போட்டி
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, பேராயர் மைக்கேல் அகஸ்டின் கலை அரங்கத்தில் வைத்து பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடையே போட்டி நடத்தி 2 பேர் வீதம் தேர்வு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள், அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்படும். எனவே இந்த பேச்சுப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment