வேளாண் படிப்புக்கு 36 ஆயிரம் பேர் விண்ணப்பம்
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வாயிலாக இதுவரை, 36 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்பு கல்லுாரிகள் செயல்படுகின்றன. இதில், 11 இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் அறிவிப்பின் படி, புதிதாக துவங்கவுள்ள நான்கு கல்லுாரிகள், தமிழ் வழி படிப்புகளை சேர்த்து நடப்பாண்டில், 350 மாணவர்களுக்கு கூடுதலாக அரசு கல்லுாரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த 8ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. நேற்றைய நிலவரப்படி, 36 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீன் கல்யாணசுந்தரம் கூறுகையில்,''கடந்தாண்டு இதே நேரத்தில், 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தற்போது, 36 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அக்., 7 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தரவரிசை பட்டியல் அக்., 18ல் வெளியிடப்படும். புதிய நான்கு கல்லுாரிகள், தமிழ் வழி பாடப்பிரிவுகள் அரசின் உத்தரவுபடி நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்த தயார்நிலையில் உள்ளோம். கூடுதலாக, 350 இடங்களும் கலந்தாய்வில் சேர்க்கப்படும். பட்டயப்படிப்புக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,'' என்றார்.
Post a Comment