புதிய கல்வியாண்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெறும் என அரசு அறிவித்த நிலையில் நேற்று பல கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் படையெடுத்து வந்து விசாரித்த வண்ணம் இருந்தனர். பிளஸ் 2 தேர்வில் அனைவரும் பாஸ் என்பதால் இந்த ஆண்டு கல்லூரிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவியது முதல் கல்விப்பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் இணையதளம் மூலம் மட்டுமே நடைபெறுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.
மாணவர்களின் மதிப்பெண் விபரம் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. புதிய கல்வியாண்டில் இன்ஜினியரிங், கலைக்கல்லூரிகளில் சேர்வதற்காக வருகிற 26ம் தேதி முதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. இதையடுத்து கல்லூரி வாயிலில் இதுகுறித்த அறிவிப்புகள் ஒட்டப்பட்டன. மதிப்பெண் விபரம் தெரிந்துகொண்ட மாணவ, மாணவிகள் பலர் தங்களுக்கு விருப்பமான கலை, அறிவியல் கல்லூரிகளில் தாங்கள் விரும்பும் பாடத்தில் சேர்வதற்கு உடனடியாக ஆர்வம் காட்டினர். தமிழகத்தில் உள்ள பல அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் நேற்று முன்தினமும், நேற்றும் மாணவ, மாணவிகள் நேரில் சென்று விசாரிக்கத் தொடங்கினர்.
கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவு, சீட்டுகள் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து கல்லூரி பணியாளர்களிடம் விசாரித்த வண்ணம் இருந்தனர். சில கல்லூரிகளுக்கு பெற்றோரும் சென்றனர். கல்லூரி நிர்வாகிகள் மாணவர் சேர்க்கைக்கு யாரும் நேரில் வரவேண்டாம். கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் தகவலின் அடிப்படையில் இணையதளத்திலேயே பதிவு செய்ய வேண்டும். சேர்க்கை குறித்த அறிவிப்பு மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஆன்லைனிலேயே சேர்க்கை நடைபெறும் என பதில் கூறி திருப்பி அனுப்பினர். இதுகுறித்து நெல்லை அரசு மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி கூறுகையில், இந்த ஆண்டு அரசு அறிவித்தபடி மாணவிகள் சேர்க்கை ஆன்லைனில் நடைபெறும்.
மாணவிகள் நேரில் வரவேண்டாம். இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம். சேர்க்கை முழுக்க, முழுக்க அரசு அறிவிக்கும் நியதிகளின் அடிப்படையில் உரிய இடஒதுக்கீடு வழங்கி நடத்தப்படும் என்றார். இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால் உயர்கல்வியில் அனைவரும் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் கல்லூரிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி உருவாகியுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஆல் பாஸ்; கல்லூரிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி: ஆன்லைனில் மாணவர் சேர்க்கை
INSTAKALVI
0
تعليقات
Tags
College News
إرسال تعليق