பல்லடம்;உயிரைக் காப்பாற்ற, தஞ்சையில் இருந்து, ஆம்புலன்ஸ்சில், மூன்று மணி நேரத்தில், 265 கி.மீ.., கடந்து, கோவை மருத்துவமனைக்கு, ஒரு குழந்தை அழைத்து செல்லப்பட்டது.
தஞ்சாவூரை சேர்ந்தவர் ஆரூரான். இவரது மூன்று மாத குழந்தை இருதய நோயால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது.
குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், 'குழந்தையின் உயிரை காக்க வேண்டும் எனில், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; கோவை அழைத்து செல்ல வேண்டும்'' என்று அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து, தஞ்சையில் இருந்து, ஆம்புலன்ஸ்சில், 265 கி.மீ., துாரத்தை, மூன்றே மணி நேரத்தில் கடந்து, குழந்தை கோவைக்கு அழைத்து செல்லப்பட்டது.
ஆம்புலன்ஸ் டிரைவர் சாரதி கூறுகையில், ''தஞ்சை - கோவை இடையே,, திருச்சி, கரூர், காங்கயம், பல்லடம், சூலுார் உள்ளிட்ட நகரங்கள் உள்ளன. இப்பகுதிகளில், சாலையை ஆம்புலன்ஸ் இடையூறின்றி கடந்து, குறிப்பிட்ட நேரத்துக்குள் குழந்தையை கொண்டு செல்வதற்கு உதவுவதற்காக, அனைத்து நகரங்களிலும் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்று காலை 5:30க்கு தஞ்சையில் புறப்பட்ட ஆம்புலன்ஸ், 8:30க்கு கோவையை சென்றடைந்தது'' என்றார்.
ஆம்புலன்ஸ், 8.45க்கு கோவை வரும் என்று கணித்த நிலையில், டிரைவரின் சாமர்த்தியத்தால், 15 நிமிடங்களுக்கு முன்பாகவே சென்றது. குழந்தை, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
إرسال تعليق