தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 19-ந்தேதி பள்ளிகள் திறப்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 


 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  

 பள்ளிகள் திறப்பு
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, யூ-டியூப் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் 9, 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது பற்றி அரசு ஆலோசித்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டு, இதற்காக பெற்றோரிடம் கருத்துகளும் கேட்கப்பட்டன. அந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒரு சாரார் திறக்கலாம் என்றும், மற்றொரு சாரார் திறக்க வேண்டாம் என்று கருத்துகள் தெரிவித்ததாலும், கல்வியாளர்கள் சிலர் எதிர்ப்பு கருத்துகள் கூறி வந்ததாலும் பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு ஒத்திவைத்தது.  

 பெற்றோரிடம் கருத்துக்கேட்பு
கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தற்போது சற்று குறைந்திருக்கும் சூழ்நிலையில், பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து பெற்றோரிடம் மீண்டும் கருத்துகள் கேட்க அரசு திட்டமிட்டது. அதன்படி, கடந்த 6, 7-ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோரை நேரில் வரவழைத்து கருத்துகள் கேட்கப்பட்டன. அந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  

 19-ந்தேதி முதல் திறப்பு
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. ஜெயலலிதாவின் அரசு, இந்த நோய்த்தொற்றில் இருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. 28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், பொங்கல் விடுமுறைக்கு பின்னர் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கருத்து கோரப்பட்டது. இக்கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பான்மையான பெற்றோர், பள்ளிகளை திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில்கொண்டும், கல்வி பயில்வதில் மாணவர்களின் வருங்கால நலனை கருத்தில்கொண்டும், வரும் 19-ந்தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.  

 ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள்
பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post