இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தமிழகத்தில் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது கரோனா விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை 

 இளநிலை இறுதியாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று (டிச.7) முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித் துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. 

இதையடுத்து இறுதி பருவத்தேர்வு தவிரமற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தற்போது இணையவழியில் நடத்தப்பட்டு வருகின்றன 

 இதற்கிடையே கல்வி ஆண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு முதல்கட்டமாக ஆராய்ச்சி மற்றும் முதுநிலை 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிச.2-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இளநிலை படிப்புகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகளை டிச.7-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. 

இதற்கான முன்னேற்பாடுகள் மாவட்டவாரியாக உயர்கல்வித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து திட்டமிட்டபடி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்று (டிச.7) முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. கல்லூரி வளாகங்கள் மற்றும் விடுதிகளில் தனிநபர் இடைவெளி, முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு அம்சங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் கல்லூரிகளுக்கு தரப்பட்டுள்ளன. 

 இதற்கிடையே இறுதியாண்டு தவிர்த்து பிற ஆண்டில் பயிலும் மாணவர்களை கல்லூரிகள் எக்காரணம் கொண்டும் நேரில் அழைக்கக் கூடாது. இதை மீறினால் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர்கல்வித் துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

أحدث أقدم